நாளை சபரிமலை நடை திறப்பு
சபரிமலை:
நடை மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பசாமி கோவில் நடை புதன்கிழமை திறக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இங்கு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை விழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்குச் செல்வார்கள். குறிப்பாக, தமிழகத்திலிருந்துசபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு அய்யப்பசாமி கோவில் நடை திறக்கப்படுகிறது. கார்த்திகைமாதம் பிறக்கும் வியாழக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுவார்கள்.
2001 ம் ஆண்டு ஜனவரி 20 ம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடைபெறும். மண்டல பூஜை திருவிழா 22 ம் தேதி கொடியேற்றுத்துடன் நடைபெறும்.முன்னதாக, டிசம்பர் 1ம் தேதி ஆராட்டு விழா நடக்கிறது.
தொடர்ந்து மகர விளக்கு பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டிருப்பதால் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
ஜனவரி 14 ம் தேதி மகர ஜோதி தரிசனம் நடக்கும். 20 ம் தேதி நடை மூடப்படும். விழா நாட்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். உச்சிகாலபூஜை முடிந்ததும் நடை மூடப்படும்.