சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடங்கியது
டெல்லி:
டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் 20-வது சர்வதேச வர்த்தக கண்காட்சியை மத்திய தொழில் துறை இணை அமைச்சர் ஒமர் அப்துல்லாதிங்கள்கிழமை தொடங்கி வைத்தார். அதோடு அஸ்பா 2000 என்ற கண்காட்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகள் சார்பில் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில் தொழில் நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்கள் நடக்கவுள்ள இந்தக் கண்காட்சிக்கு உலகம் முழுவதிலுமிருந்து 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என்றுஎதிர் பார்க்கப்படுகிறது.
கண்காட்சியைத் துவக்கி வைத்து அமைச்சர் ஒமர் அப்துல்லா பேசுகையில், உலகமயமாக்கல் நமக்கு ஏராளமான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. தற்போது நம் முன் இருக்கும் குறிக்கோள்களில் விண்வெளி ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சிஆகியவை மிக முக்கியமானவை.
மேலும், சர்வதேச அளவில் மட்டுமின்றி, இந்திய அளவிலும் நம் முன் நிற்கும் போட்டிகளைச் சமாளிக்கும் வகையில் அனைத்து வகையானமாற்றங்களையும் ஏற்கும் வலிமையை நாம் பெற வேண்டும். சமூக-பொருளாதார நிலையில் நாம் அடைய வேண்டிய குறிக்கோள்கள் இன்னும்அதிகமாக உள்ளது.
வளர்ச்சிக்கு மூல ஆதாரமே தொழில் நுட்பம்தான் என்பதை இந்தியா மற்றும் அண்டை நாடுகள் பறைசாற்றும் வகையில் இந்தக் கண்காட்சிஅமைந்திருக்கும் என்றார் ஒமர் அப்துல்லா.
யு.என்.ஐ.