தனி ஈழமே சிறந்த தீர்வு .. வைகோ
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் பாலசிங்கத்தைச் சந்தித்தது குறித்துக் கேள்விஎழுப்பினால் அதற்கு பதிலளிக்கவும், இவ்விஷயத்தில் மதிமுக வின் நிலை குறித்தும் தெளிவாகத் தெரிவிக்கப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர்வைகோ வியாழக்கிழமை நிருபர்களிடம் தெரிவித்தார்.
கடந்த வாரம் மதிமுக வின் பொதுச் செயலாளராக வைகோ ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கட்சியின் பொதுக் குழுக் கூட்டம்வியாழக்கிழமை நடந்தது. கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசுகையில், லண்டனில் விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் பாலசிங்கத்தைச் சந்தித்துப்பேசினேன். இது மனிதாபிமான அடிப்படையிலான சந்திப்பு. இதில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் இல்லை.
நமது நாட்டில்தான் விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளரை சந்திப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரிட்டனில் அதுபோன்ற தடையில்லை.
அகில இந்திய பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசிய ஜனநாயகக் கட்சியில் உள்ள கூட்டணித்தலைவர்கள் அனைவரும் கட்சியின் கொள்கைகளுக்குப் பங்கம் வராதவாறு, கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
புலிகளின் செய்தித் தொடர்பாளர் பாலசிங்கத்தைச் சந்தித்தது குறித்து நான் ஏற்கனவே பாரதிய ஜனதாக் கட்சிப் பிரமுகர்கள் பலரிடம் விரிவாகக் கூறியுள்ளேன்.நடக்கவிருக்கும் தேசிய ஜனநாயகக் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டால் நான் பதிலளிக்கத் தயாராகஇருக்கிறேன்.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமானால், தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் தமிழர்களுக்கு தனி ஈழம் கொடுப்பதே சிறந்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை, அவர், இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் பேச்சுவார்த்தைநடத்தும் போது கைது செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். யார் வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் சொல்லட்டும். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை.
டான்சி ஊழல் தீர்ப்பு:
சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு டான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுக வினர் செயற்குழுக் கூட்டம் நடத்தினர். செயற்குழுக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதல்வேலையாக கருணாநிதியை ஜெயலில் அடைப்போம் என்று பேசியுள்ளார்.
டான்சி நிலப் பேர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் முன்னுக்குப் பின் முரணாக மனநிலைபாதிக்கப்பட்டவர் போல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் அவர். ஊழல் வழக்கில் தண்டனை கிடைத்துள்ளதால், அவரது மனநிலை சமச்சீர்இல்லாமல் பேசுகிறார் என்பதையே இது காட்டுகிறது என்றார்.
யாருடன் கூட்டணி?:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில், மதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே தொடர்ந்து இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.
வீரப்பன் பிடியிலிருந்து, கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்கப்பட்டு விட்ட செய்தி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விவகாரத்தைமிகவும் சாமர்த்தியமாகக் கையாண்டுள்ளார். அடுத்த மாதம் முதல் மதிமுக தேர்தல் நிதி வசூல் செய்யத் தொடங்கும் என்றார் வைகோ.
யு.என்.ஐ.