த.ரா.கா. தலைவராக வாழப்பாடி மீண்டும் தேர்வு
தூத்துக்குடி:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவராக வாழப்பாடி ராமமூர்த்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு கூட்டம், தூத்துக்குடி நகரசபை திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் வாழப்பாடிராமமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்தலும் நடைபெற்றது.
இதில் வாழப்பாடி ராமமூர்த்தி பெயரில் 14 மாவட்டத் தலைவர்கள் மனுத்தாக்கல் செய்தனர். தலைவர் பதவிக்கு வேறு யாரும் மனுத்தாக்கல்செய்யவில்லை. இதனால் வாழப்பாடி ராமமூர்த்தியே மீண்டும் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்கை 33 சதவீதமாக குறைக்கும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
நதிகள் ஒருங்கிணைப்புத் திட்டத்தை துரிதப்படுத்தி, அனைத்து நதிகளும் இணைக்கப்பட வேண்டும்.
வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக ராஜீவ் காங்கிரஸ் தனது முழு ஆதரவையும் அளிக்கும்.
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் மிக நிதானமாக, கவனமாக செயல்பட்டதற்காக தமிழக ராஜீவ் காங்கிரஸ், கருணாநிதியைபாராட்டுகிறது. மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.