வீரப்பனைப் பிடிக்க செயற்கைக்கோள், நவீன ஆயுதங்கள்
டெல்லி:
வீரப்பனைப் பிடிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோருடன் தமிழகஅதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த அதிகாரிகள் மத்திய அமைச்சரும் தி.மு.க. தலைவர்களில் ஒருவருமான டி.ஆர்.பாலு தலைமையில் அத்வானியைச் சந்தித்தனர்.
அப்போது வீரப்பனைப் பிடிக்க என்ன உதவிகள் வேண்டுமோ அனைத்தையும் மத்திய அரசு வழங்கும் என அத்வானி உறுதி அளித்தார். படைகள்,ஆயுதங்கள் எது வேண்டுமானாலும் தரத் தயார் என்றார்.
வியாழக்கிழமை டெல்லி சென்ற தமிழக தலைமைச் செயலாளர் முத்துசாமி, உள்துறைச் செயலாளர் சாந்த ஷீலா நாயர், காவல்துறை டி.ஜி.பி. ராஜகோபாலன்ஆகியோர் அத்வானியையும், பெர்னாண்டசையும் சந்தித்துப் பேசினர்.
வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படைக்கு நவீன ஆயுதங்களும், தகவல் தொடர்புக் கருவிகளும் வேண்டும் என அவர்கள் பெர்னாண்டசிடம் கேட்டுக்கொண்டனர்.
அதே போல செயற்கைக் கோளின் உதவியுடன் காட்டுப் பகுதியை படம் பிடித்து வீரப்பனின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உதவ வேண்டும் எனமத்திய அரசிடம் தமிழக அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அனைத்து உதவிகளையும் செய்வதாக மத்திய அமைச்சர்கள் உறுதியளித்தனர்.
பிரதமர் வாஜ்பாயியைச் சந்தித்தும் இந்தக் கோரிக்கைகைள வலியுறுத்த தமிழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதே போல கர்நாடக டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர் ஆகியோரும் டெல்லியில் தான் முகாமிட்டுள்ளனர்.
கமாண்டோக்கள் வேண்டும்:
இந்நிலையில் வீரப்பனைப் பிடிக்க தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கமாண்டோக்களை அனுப்ப வேண்டும் எனக் கோரிபிரதமர் வாஜ்பாய், அமைச்சர் அத்வானிக்கு கர்நாடக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.