மூட நம்பிக்கையை ஒழியுங்கள் .. வீரமணி
திருச்சி:
மூட நம்பிக்கைகளை இளைஞர்கள் விட்டொழிக்க வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.
திராவிடக் கழகத்தின் இளைஞர் அணி மாநாடு திருச்சி புத்தூரில் உள்ள பெரியார் மாளிகை, ராமமூர்த்தி நினைவரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.மாநாட்டில் கி.வீரமணி பேசியதாவது:
சாதி, மதம், மொழி என்ற நச்சுப் பாம்புகளின் பல்லைப் பிடுங்கும் வகையில் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்அனைவரும் எனக்கு 68 வயதாகிறது என்றார்கள். அது தவறு. எனக்கு வயது 28 தான்.
திராவிட கழகத்துக்கு ஒரு அற்புத ஆற்றல் இருக்கிறது. தந்தை பெரியார் 95 வயதிலும் 25 வயது இளைஞரைப் போல செயல்பட்டு வந்தார். அவர்வழியில் நானும் என்னுடைய 68 வயதில் 28 வயது இளைஞனாக திராவிட கொள்கையை பரப்பி வருகிறேன்.
தீவிரவாதம், வன்முறையால் நாட்டில் எதையும் சாதிக்க முடியாது. வன்முறை மூலம் எதையும் சாதித்து விடலாம் என்று இளைஞர்கள் நினைக்கக் கூடாது.முட்டாள்தனமான மூட நம்பிக்கைகளை அறவே ஒழிக்கப் பாடுபட வேண்டும்.
தற்போது தமிழகத்தில் சாதிக்கட்சிகள் உருவாகி வருகின்றன. வெகு விரைவில் இந்த சாதிக் கட்சிகள் காணாமல் போகும். ஆர்.எஸ்.எஸ். என்றநச்சுக் கிருமியை இந்த மண்ணில் இருந்து அழித் தொழிக்க வேண்டும் என்றார் வீரமணி.