அனைத்துக் கட்சியினரும் கூடிய வைகோ வீட்டுத் திருமணம்
டெல்லி:
டெல்லியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகள் திருமண வரவேற்பு திங்கள்கிழமை மாலை நடந்தது.
திருமண வரவேற்பு டெல்லி அக்பர் ரோட்டிலுள்ள அரசு மாளிகையில் நடந்தது. வரவேற்பு விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் வைகோவின் மகள் கண்ணகிக்கும், சிகாகோவில் என்ஜினியராகப் பணிபுரியும் ஜான் புஷ்பராஜூக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.
இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ளும் வகையில் டெல்லியில் திருமண வரவேற்பு நடத்த ஏற்பாடுசெய்திருந்தார் வைகோ.
விடுதலை ப்புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிகளுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வரும் வைகோ வீட்டு திருமண வரவேற்பில், பலதலைவர்கள், வைகோவிடம் அரசியல் ரீதியாக உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து கலந்து கொண்டனர்.
துணை ஜனாதிபதி, பிரதமர்:
துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் திருமணவரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், ஐ.கே.குஜ்ரால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் மற்றும்பல மாநில முதல்வர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திருமண வரவேற்பு காரணமாக அரசு மாளிகை நாதஸ்வர வாத்யத்துடன், மிக ரம்மியமாகக் காட்சியளித்தது. அரசியல்ரீதியாக குடுமிப்பிடி சண்டைபோட்டு வரும் பல கட்சித் தலைவர்களும் சண்டையை எல்லாம் மறந்துவிட்டு ஒற்றுமையாக இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.