பிரபாகரனின் அறிவிப்புக்கு இலங்கையில் வரவேற்பு
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று விடுதலைப் புலிகள்தலைவர் பிரபாகரன் கூறியிருப்பதை இலங்கைப் பத்திரிக்கை பாராட்டியுள்ளது.
இதுகுறித்து இலங்கை பத்திரிக்கை வெளியிட்டுள்ள தலையங்கம் குறித்த விவரம்:
இலங்கையில் 17 ஆண்டுகளாக தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்தப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் நார்வே சமரசக் குழு இறங்கியுள்ளது.
இந்நிலையில் பிரபாகரன், மாவீரர்கள் தினத்தின் இறுதி நாளில் இலங்கை அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்துள்ளார்.இது வரவேற்கக் கூடிய விஷயமாகும். முன்னதாக பிரபாகரன் கூறுகையில், போர் நிறுத்தம் அறிவித்தால் தான் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றுஅறிவித்திருந்தார்.
அதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்ததையடுத்து, 1983 ம் வருடத்திலிருந்து தொடர்ந்து நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில்அமைதிப் பேச்சு வார்த்தைக்குத் தயார் என்று அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் போர் நிறுத்தம் என்று பேச்சுக்கே இடமில்லை என்றுஇலங்கை அரசு அறவித்துள்ளது.
போர் நிறுத்தம் இல்லை:
முன்னதாக, ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள அதிபர் சந்திரிகா கூறுகையில், இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண, புலிகளுடன்பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு எப்போதும் தயார்.
ஆனால் பேச்சுவார்த்தை குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை போர் நிறுத்தம் இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நார்வே தூதுக்குழு:
இதற்கிடையே இனப் பிரச்சனையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக்சோல்ஹெம் கடந்த நவம்பர் 1 ம் தேதி, பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இங்கிலாந்து தூதுக்குழுவும் இலங்கை வந்து இனப் பிரச்சனை குறித்து ஆராய்ந்துள்ளது. அமெரிக்க நிபுணர்களும் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர்.இந்நிலையில் பிரபாகரனின் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை குறித்த அழைப்பு வரவேற்கத்தக்கது என்று இலங்கைப் பத்திரிக்கையில் பிரபாகரனுக்குப்பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.