மேட்ச் ஃபிக்சிங்: வீரர்கள் மீது அடுத்த வாரம் நடவடிக்கை
கல்கத்தா:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட முகமது அசாருதீன் மற்றுமுள்ளவர்கள் மீதான நடவடிக்கைகுறித்த முடிவை அடுத்த வாரம் வரை ஒத்தி வைத்துள்ளனர்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அசாருதீன், மனோஜ் பிரபாகர், அஜய் ஷர்மா, மோங்கியா, ஜடேஜா ஆகியோர் மீது சி.பி.ஐ. குற்றம்சாட்டியிருந்தது.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட மாதவனும் இவர்கள் மீதான குற்றங்களை உறுதி செய்தார்.
அவர் அசாருதீன் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டிருந்தார் எனவும், மோங்கியாவைத் தவிர மற்றவர்கள் சூதாட்ட ஏஜென்டுடன் தொடர்பு வைத்திருந்தனர்எனவும் தெரிவித்திருந்தார்.
செவ்வாய் கிழமை கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் ஆஜரான அசாருதீன் தான் குற்றமற்றவர் என கூறியிருந்தார்.
இந்நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டம் புதன் கிழமையன்று நடந்தது.
இதில் குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.ஆனால் முடிவு எடுப்பது அடுத்த வாரம் வரைஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத் தலைவர் முத்தையா கூறுகையில், கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களிடையே சில கருத்து வேறுபாடுகள்ஏற்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் மீது முடிவெடுப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றம் செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கைஎடுக்கப்படும்.
இறுதி முடிவு எடுக்கும் முன் இந்த வீரர்கள் நாட்டிற்கு ஆற்றிய பணி பற்றியும் நாங்கள் யோசித்து முடிவு செய்வோம். இறுதி முடிவு திங்கள் அல்லதுசெவ்வாய்க்கிழமை எடுக்கப்படும்.
வீரர்கள் மீது நடவடிக்கைஎடுக்கும் முன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சட்ட ஆலோசனைகளும் பெறும் என கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.