தமிழர் விடுதலை படைக்கு ஆதரவு அதிகரிக்கிறது
கடலூர்:
தமிழர் விடுதலைப் படை இயக்கத்துக்கு மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது என்று ரேடியோ வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கொலை வழக்குத் தொடர்பாக ஜெயிலில் அடைக்கப்பட்டவர் ரேடியோ வெங்கடேசன். நடிகர் ராஜ்குமாரைக் கடத்திய வீரப்பன், அவரை விடுவிக்கவேண்டுமானால் ரேடியோ வெங்கடேசனை தமிழக சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார்.
வீரப்பன் விடுவிக்கக்கோரிய இந்த ரேடியோ வெங்கடேசன் கோர்ட்டில் ஆஜராக வந்த போது நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கடந்த 83, 84 ம் ஆண்டுகளில் தனி ஈழம் வேண்டும் என்று விடுதலைப்புலிகள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாகதமிழகத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்தனர்.
ஆனால் அரசோ சாதியின் பெயரால் இளைஞர்களைப் பிரித்தது. இருப்பினும் தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் சில இயக்கங்கள் தங்கள் ஆதரவைத்தெரிவித்து வருகின்றன.
மலைவாழ் மக்களின் ஆதரவு வீரப்பனுக்குப் பெருமளவு உள்ளது. இன்று தமிழக மக்கள் குறித்து நடிகர் ராஜ்குமார் நன்கு தெரிந்து கொண்டுள்ளார்.
சாதி, மதம், தீண்டாமை இன்னும் ஒழிக்கப்படவில்லை. அவை என்று ஒழிக்கப்படுகிறதோ அன்று தான் மக்களுக்கு விடுதலை கிடைத்ததாகும்.மக்களின் விடுதலைக்காகத்தான் எங்கள் இயக்கம் பாடுபட்டு வருகிறது என்றார் ரேடியோ வெங்கடேசன்.