கோவையில் மீண்டும் வெடிகுண்டு பீதி
கோவை:
கோவையில் அதிகாலையில் மர்ம சூட்கேஸ் ஒன்று பரபரப்பு ஏற்படுத்தியது.
டிசம்பர் 6 ம் தேதி இந்தியா முழுவதும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் கருப்பு தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி கோவையில் குண்டுவெடிப்புச் சம்பவம் எதுவும் ஏற்படாதவாறு பாதுகாப்பு பலப் டுத்தப்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மற்றும் சமூக விரோதக் கும்பல் ஆகியவற்றைக் கண்காணிக்க போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணியில்ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அங்கு ஒரு சூட்கேஸ் அனாதையாகக் கி டந்தது. அப்போது இந்த சூட்கேஸ் பற்றி பயணிகளிடம் விசாரித்தனர். ஆனால் உரிய பதில்கிடைக்கவில்லை. இதனால், போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
இதில் வெடிகுண்டு இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
ரெயில்வே துணை டி .எஸ். பி தேவராஜ் உள்பட உயர் அதிகாரிகள் அந்த பெட்டியைச் சோதனை செய்தனர். அப்போது அதில், வெடிகுண்டு இல்லை எனசோதனையில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அந்தப் பெட்டியைப் போலீசார் திறந்து பார்த்தனர். அதில், 16 பட்டுப் புடவைகளும், ரூ. 1500 ரொக்கம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த பெட்டியை திறந்து சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போது அலறி அடித்துக் கொண்டு ஒரு பெண் ஓடி வந்தார்.
அந்த சூட்கேஸ் தன்னுடையது தான் எனவும், மொத்தம் 15 சூட்கேஸ்கள் கொண்டு வந்ததில் இது மட்டும் தவறி விட்டதாகவும் கூறினார். கல்பனாடோயா என்ற அந்த பெண் இந்த சூட்கேஸ்களை திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு எடுத்துச் செல்வதாகக் கூறினார்.
போலீஸாருக்கு வந்த மிரட்டல்
கோவையில் நான்கு இடங்களில் குண்டு வெடிக்கும் என போலீசாருக்கு வந்த மர்ம போன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தீவிர வாகன சோதனையில் போலீசார், அதிரடிப்படை, ஊர்க்காவல் படையினர் உள்பட மாணவர்களும் ஈடுபட்டனர்.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதி, போலீசார் பலத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை கோவையில் மேற்கொண்டனர்.
இருந்த போதிலும், கோவையில் நான்கு இடங்களில் குண்டு வெடிக்கும் என மர்ம போன் போலீசாருக்கு வந்தது.
காந்திபுரத்தில் ஒரு டவுன் பஸ்சிலும், மாருதிக் காரிலும், ஒப்பணக்கார வீதியிலும், ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் குண்டு வெடிக்கும் எனக் கூறி வைத்துவிட்டான்.
இந்த மிரட்டல் பற்றி அறிந்ததும் போலீசார் உஷாரடைந்தனர். இதனையடுத்து போலீசார் நகர் முழுவதிலும் தீவிர சோதனைக்குத் தயாராயினர்.
அனைத்து வாகனங்களையும் மாலை வரை சோதனையிட்டனர். இந்த சோதனைப் பணியில் அதிரடிப் படையினர், ஊர்க்காவல் படையினர், போலீசார் மற்றும்மாணவர்கள் ஈடுபட்டனர்.
ஆனால், வெடிகுண்டு எங்கும் கண்டு பிடிக்கப்படவில்லை. இருந்தாலும் மாலை வரை சோதனை தொடர்ந்து வருகிறது. மேலும், டெலிபோனில் மிரட்டல்விடுத்த ஆசாமியைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.