அமைதியாகக் கழிந்தது டிசம்பர் 6
டெல்லி:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6 எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியாகக் கழிந்தது.
உத்தரப் பிரதேசம், பிகார், ஆந்திராவில் ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் முஸ்லீம்கள் கருப்புக் கொடிகளை ஏற்றிதங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சில நகரங்களில் அமைதிப் பேரணிகளும் நடந்தன. ஹைதராபாத்தில் நடந்த கல் வீச்சு சம்பவத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது:
பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடையவர்களாக சி.பி.ஐயால் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகிய மத்திய அமைச்சர்கள ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி எதிர்க் கட்சிகள் நடத்தி வரும் போராட்டத்தாலஇந்திய நாடாளுமன்றம் புதன்கிழமையும் ஸ்தம்பித்தது.
அயோத்தியில் பாதுகாப்பு:
இந்துக்களும், முஸ்லீம்களும் அயோத்தியில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்தப் போவதாக அறிவித்ததையடுத்து அங்குபலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அயோத்தியிலும், பைசாபாத்திலும் 2,000 சிறப்பு அதிரடிப் படையினரும் போலீசாரும்குவிக்கப்பட்டனர்.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் இங்கு விரைவில் ராமர் கோவில் கட்ட வேண்டும் எனக் கோரி வியாழக்கிழமை பேரணிநடத்தினர்.
பாபர் மசூதி புனரமைப்புக் குழுவினரும் எதிர் கூட்டம் நடத்தினர். அதில் இடிக்கப்பட்ட மசூதியை உடனே திரும்பக் கட்டவேண்டும் எனக் கோரிக்கை எழுப்பினர்.
மொத்தத்தில் இந்தியா முழுவதுமே மிகுந்த பதட்டத்தோடு எதிர்கொள்ளப்பட்ட டிசம்பர் 6 அமைதியாகக் கழிந்தது. இதற்கு நாடுமுழுவதும் செய்யப்பட்ட மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் முக்கிய காரணமாகும்.
தமிழகத்தில்...
சென்னையிலும் பிற முக்கிய நகரங்களிலும் முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினரும் பிற இஸ்லாமி அமைப்பினரும் கண்டனஆர்பாட்டங்கள் நடத்தினர். ஆனால், எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை.
இம் முறை டிசம்பர் 6ம் தேதி முஸ்லீம்களின் புனித ரம்ஜான் மாதத்தில் வந்ததால் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டிருந்தது.