மதத்தின் அடிப்படையில் அசாருக்கு தண்டனையா?
டெல்லி:
அசாருதீனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மத அடிப்படையில் வழங்கபட்டது என ஃபதேபுரி மஸ்ஜித்தின் ஷாஹி இமாம் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் அசாருதீனுக்கும், அஜய் சர்மாவுக்கும் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக வாழ் நாள்முழுவதும் கிரிக்கெட் விளையாடக் கூடாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது.
அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர் ஆகியோருக்கு 5 ஆண்டு கால தடையும் கிரிக்கெட் வாரியம் விதித்தது.
இது மதத்தை மனதில் கொண்டு அளிக்கப்பட்ட தண்டனை என ஃபதேபுரி மசூதியின் நாயிப் ஷாஹி இமாம் முகமது மவுசம் அகமது கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பாவது:
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது சரி. ஆனால் தண்டனையை உறுதி செய்வதில் பாரபட்சம், பிரிவினை நடத்தை இருப்பதாக சந்தேகம்வரக்கூடாது.
குற்றம் செய்த பல பெரிய வீரர்களை காப்பாற்ற அசாருதீன் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அசாருதீனை காப்பாற்றுவதுஎங்கள் நோக்கம் கிடையாது.
ஆனால் அதே சமயம் சட்டம் தன் கடமையைச் செய்யும் போது குற்றம் செய்த அனைவருக்கும் சமமான தண்டனை தரப்பட வேண்டும் என்பது எங்கள்எதிர்பார்ப்பு.
அசாருதீனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மதத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. சட்டத்தை சமமாக உபயோகப் படுத்தாவிட்டால் இந்த நாட்டில்பிறப்பின் அடிப்படையால் இரண்டாம் இடத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக நாங்கள் நடத்தப்படுகிறோமோ என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்படுகிறதுஎன தெரிவித்துள்ளார்.