தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் ஆகுமா?
கல்கத்தா:
தபால் ஊழியர்கள் ஸ்டிரைக் விரைவில் வாபஸ் ஆகும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
சம்பள உயர்வு உள்பட தங்களது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தபால்ஊழியர்கள். இவர்களது போராட்டம் 3 வது நாளாக புதன்கிழமையும் நீடித்தது.
இதையடுத்து மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தபால் ஊழியர்கள் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ் ஆகும் என்று அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், தபால் ஊழியர்களின் 5 முக்கியக் கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டோம்.
அவர்கள் கோரும் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சட்டசிக்கல்கள் உள்ளன. அதனால் அவற்றை நிறை வேற்றுவது குறித்து ஆராய்ந்துவருகிறோம்.
தபால் சேவையில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்களா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
தபால் ஊழியர்கள் சம்மேளனத்திடம் எல்லா கோரிக்கைகள் குறித்தும், அவற்றை நிறை வேற்றுவது குறித்தும் தெளிவாகக் கூறியுள்ளோம்.
இதனால் தபால் ஊழியர்கள் விரைவில் வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுவார்கள் என்று நம்புகிறோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.