வீரப்பனை நிச்சயம் பிடிப்போம் .. தமிழக டி.ஜி.பி.
சென்னை:
வீரப்பனைப் பிடிப்பதற்காக சத்யமங்கலம் காட்டுக்குச் சென்றுள்ள கூட்டு அதிரடிப் படைப் போலீஸார் இந்த முறை கண்டிப்பாக வீரப்பனைப் பிடித்தே தீருவர்என்று தமிழக டிஜிபி. ராஜகோபாலன் சென்னையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்த முறை எப்படியாவது வீரப்பனைப் பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இரு மாநில அதிரடிப்படையினரும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.அவர்களுக்கு எல்லைப் பாதுகாப்புப் போலீஸாரும் உதவி புரிந்து வருகின்றனர்.
மேலும் வீரப்பன் பதுங்கியிருக்கும் சத்யமங்கலம் காட்டுப் பகுதியில் வாழும் மக்களும் போலீஸாருக்கு, வீரப்பன் குறித்துத் தங்களுக்குத் தெரிந்ததகவல்களைக் கூறி வருகிறார்கள்.
மேலும், சத்தியமங்கலம் எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களிடம், கூட்டு அதிரடிப் படை போலீஸார் மிகவும் கடுமையாகவோ, அவர்களை துன்புறுத்தும்வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது என்று அதிரடிப்படை போலீஸாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஏனெனில், வீரப்பனின் நடமாட்டம் குறித்து, வனப்பகுதியை சுற்றி வசித்து வரும் மக்கள் விரல் நுனியில் விவரங்கள் வைத்திருப்பார்கள்.
காட்டுப்பகுதியில் பல மறைவிடங்களில் வீரப்பன், கண்ணி வெடிகளையும், ஜெலாட்டின் குச்சிகளையும் மறைத்து வைத்திருந்தான் என்று வெளியாகும் செய்திகளில்சிறிதளவும் உண்மையில்லை.
கார்கில் போரின் போது பயன்படுத்தப்பட்ட கண்காணிப்புக் கருவிகளை, வீரப்பனைப் பிடிப்பதற்குத் தர வேண்டும் என்று மத்திய பாதுகாப்புஅமைச்சரவையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
யு.என்.ஐ.