ஸ்ரீநகரில் அமைச்சரைக் கொல்ல முயற்சி
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் தெற்குப் பகுதியான அர்வானி கிராமத்தில் அமைச்சர் அலி முகமது சாகரைக் குறி வைத்துத்தீவிரவாதிகள் கிரானைடு வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதில் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இவர்களில் 5 பேர் போலீஸ்காரர்கள்.
இந்தத் தாக்குதலில் அமைச்சர் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 50 கிலோமீட்டர்தொலைவிலுள்ள அர்வானி கிரமாத்தில் உள்ள தனது வீட்டு வாசலில் குண்டு துளைக்காத காரில் அமைச்சர் ஏறியஅடுத்த சில நொடிகளில் கிரானைட் வெடிகுண்டு வெடித்தது.
இதில், சாகருடன் சென்றிருந்த கிராம மக்கள் சிலரும், போலீஸ்காரர்கள் சிலரும் காயமடைந்தனர். இச்சம்பவத்தில்மொத்தம் 20 பேர் காயமடைந்தனர். அவர்களில் 7 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
முஸ்லீம்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் ஒரு அமைச்சரைக் குறிவைத்து நடக்கும் முதல் தாக்குதலாகும் இது. சாகர் ஒரு மேம்பாலத்தைத் திறந்து வைப்பதற்காக தனது ஊருக்குச்சென்றிருந்தார்.
உதம்பூர் மாவட்டம் கூல் குலாப்கார் கிராமத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் 3 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் அமானுல்லா கானின் மகளின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் சென்றிருந்த அகில இந்திய ஹூரியத் அமைப்புத் தலைவர் அப்துல் கானி ஸ்ரீநகர்திரும்பியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.