வன்முறையைத் தடுக்க அராபத்துடன், இஸ்ரேல் அதிகாரிகள் பேச்சு
காசா:
பாலஸ்தீனப் பகுதிகளில் தொடரும் வன்முறையை தடுத்து நிறுத்தவும், அமைதிப் பேச்சுவார்த்தையை திரும்ப தொடர்வது குறித்தும், பாலஸ்தீன தலைவர் யாசர்அராபத்துடன், இஸ்ரேல் அரசு அதிகாரிகள் காசா நகரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புனித ஸ்தலமான ஜெருசலேம் தொடர்பாக இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்தவன்முறையில், 319 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீனர்கள். 38 பேர் இஸ்ரேல் வீரர்கள் மற்றும்பொதுமக்கள்.
காசாவில் சமீபத்தில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டனர். அங்குள்ள முஸ்லீம் தீவிரவாதிகள்கூறுகையில், பாலஸ்தீன வீரர்கள் தாக்குதல் நடத்தியதில், பல இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர் என்றனர்.
வன்முறையைத் தடுப்பது தொடர்பாக ஏற்கனவே அரபாத், பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹப்பர்ட் வெட்ரைனைச் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில், அராபத் வெள்ளிக்கிழமை காலை 10.40 மணிக்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷோலோமோ பென் அமி மற்றும்பிரதமரின் மூத்த ஆலோசகர் கிலாட் ஷெர் ஆகியோருடன் காசாவில் பேச்சுவார்த்தை நடத்தினார் என்று பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து இஸ்ரேல் தரப்பில் கூறுகையில், இந்தச் சந்திப்பின் மூலம் இஸ்ரேல், பாலஸ்தீனர்களுக்கிடையே கடந்த 11 வாரங்களாக நடக்கும் சண்டைக்குத்தீர்வு கிடைக்கும் என்றனர்.
இரு தரப்பும் சில நிபந்தனைகளை விதித்து, போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேசமாதானம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன எனக் கூறலாம்.
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் எஹூத் பாரக் பதவி விலகி விட்டதால், வரும் பிப்ரவரி மாதம் இஸ்ரேலில் பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில்பராக்கும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும், முன்னாள் பிரதமர் நதாயன்ஹுவும் போட்டியிடப் போவதாக கூறியுள்ளார். தேர்தலுக்குப் பின்பாலஸ்தீனப் பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சில அரபு நாடுகள், இஸ்ரேலில் நடக்கவுள்ள பிரதமர் தேர்தலுக்கு முன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்என்று வலியுறுத்தியுள்ளதால் அராபத் பேச்சுவார்த்தையில் முழு மூச்சாக இறங்கி விட்டார் என்று கூறப்படுகிறது.