தமிழை செம்மொழியாக்க வேண்டும் ..பா.ஜ.க
ஈரோடு:
தமிழ் மொழியை செம்மொழியாக்க தமிழ் ஆர்வலர்கள் வைத்திருக்கும் கோரிக்கையை பிரதமர் வாஜ்பாயிடம் வலியுறுத்துவோம் என்று ஈரோட்டில்நடந்த மாநில பாரதீய ஜனதாக் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோட்டில் பா.ஜ.க. மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கூட்டணிக் கட்சிகள் தங்கள் கருத்து வேறுபாடுகளை பத்திரிக்கையில் வெளிப்படுத்துவது கூட்டணியைப் பலவீனப்படுத்தும். இப்பிரச்னை குறித்து கூட்டணியின்தலைவர்கள் முடிவு மேற்கொள்ள வேண்டும்.
அயோத்திய பிரச்னையை ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் கிளப்பி, அவையை நடக்க விடாமல் செய்யும் முயற்சியில், காங்கிரஸ், மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த முயற்சியை முறியடித்த கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறோம்.
அடுத்து வரும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க அரசு அமைய வேண்டும். இந்த அரசு வாஜ்பாய் அரசிற்கு உறுதுணையாக அமைய வேண்டும். தேசியகூட்டணியில் அங்கம் வகித்து வரும் கட்சிகள், தங்களுடைய கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாகத் தெரிவித்தால், அது கூட்டணியைப் பலவீனப்படுத்தும்.எனவே, கூட்டணியில் யார் யார் இடம் பெற வேண்டும் என்பதை தேசிய அளவில் வாஜ்பாயும், மாநில அளவில் கருணாநிதியும் முடிவு செய்ய வேண்டும்.
தமிழ் மொழியை செம்மொழியாக்க தமிழ் ஆர்வலர்கள் வைத்திருக்கும் கோரிக்கையை பிரதமர் வாஜ்பாயிடம் வலியுறுத்துவோம். வரும் புத்தாண்டிற்குமுன்னதாக இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைப் பகுதிகளை பதிவு செய்ய தமிழக அரசு மறுத்து வருகிறது. இதனைக் கைவிட்டு, இத்தகைய வீட்டு மனைகளைப் பதிவுசெய்து அங்கீகரம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
கரும்பில் 8.5 சதவீதம் பிழிதிறன் உள்ள கரும்புக்கு டன் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும். கரும்பிலிருந்து ஆல்கஹால் தயாரிக்க அனைத்துஆலைகளுக்கும் அனுமதியளிக்க வேண்டும்.
ராமநாதபுரம், சேலம், தேனி, புதுக்கோட்டை, மதுரை, திருவண்ணாமலை, சிவகங்கை, போன்ற மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாகஅறிவிக்க வேண்டும். இந்த மாவட்டங்களுக்கு உரிய வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும்.
சீனா, வங்கத்திலிருந்து கச்சா பட்டு இறக்குமதி செய்து, நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் அரசு உதவ வேண்டும் போன்ற தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.