புலிகள் சண்டை நிறுத்தம்: இலங்கை நிராகரித்தது
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள சண்டை நிறுத்தஅறிவிப்பை இலங்கை அரசு நிராகரித்து விட்டது.
இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது.ராணுவ வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள் என்றார்.
முன்னதாக, விடுதலைப்புலிகள் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் கடந்த 17 வருடங்களாக நடந்து வரும் இனப்பிரச்சனைக்குத்தீர்வு காணும் வகையில் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம் என்று கூறியிருந்தனர்.
இலங்கைக்கு நிதியுதவி செய்யும் நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிபர் சந்திரிகா பிரான்ஸ் சென்றுள்ளதால், புலிகளின் சண்டை நிறுத்த அறிவிப்புகுறித்து இலங்கை அரசு பின்னர் கருத்துத் தெரிவிக்கும் என்று இலங்கை வானொலி செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று இலங்கை அரசு அறிவித்திருந்த போதிலும், அமைதி ஒப்பந்தம்கையெழுத்தாகும் வரை யாழ்ப்பாணத்தில் ராணுவ வீரர்கள் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அரசு ஏற்கனவே கூறியுள்ளது.
யு.என்.ஐ.