ஈரோடு மசூதி சேதம் .. 5 பேர் கைது
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் அருகேயுள்ள மசூதியை சேதப்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.
சத்யமங்கலத்தை அடுத்துள்ள கோட்டு வீராயன்பாளையத்தில் உள்ள மசூதியை கடந்த 5 ம் தேதி சிலர் சேதப்படுத்தினர். பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதிக்கு முந்தைய நாள் இச்சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி டிசம்பர் 8 ம் தேதி போலீஸார் மசூதி இடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரைக் கைது செய்தனர். இவர்கள்5 பேரும் இந்து மதவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. இவர்கள் பின்னர் சத்யமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களைப் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இவர்கள் 5 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே இவர்கள் 5 பேரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.