காளிமுத்துவுக்கு இதய அறுவை சிகிச்சை
சென்னை:
அ.தி.மு.க.அவைத் தலைவர் காளிமுத்துவுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
காளிமுத்து கடந்த 10 ம் தேதி இரவு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டபொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கூட்டம் முடிந்ததும் ஒரு ஹோட்டலுக்குச் சென்று ஓய்வெடுத்தார்.அங்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. ரத்த வாந்தியும் எடுத்தார்.
உடனடியாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது இருதயத்தின் இடதுபுற அறைகளில் உள்ள தமனிகளில் 4 இடங்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததைக்கண்டுபிடித்தனர். இதையடுத்து காளிமுத்துவுக்கு சர்க்கரைநோய்க்கும், ரத்தவாந்திக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 9 மணிக்கு டாக்டர் கிரிநாத் தலைமையில் டாக்டர்கள் காளிமுத்துவுக்குஇருதய அறுவை சிகிச்சை செய்தனர்.
அறுவை சிகிச்சை முடிந்தபின் அவருடைய இதயத் துடிப்பும், ரத்த ஓட்டமும் சீராக இருப்பதாக டாக்டர்கள்அறிவித்தனர். தற்போது அவர் 24 மணி நேரத்துக்கு மயக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, புதன்கிழமை இரவு அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு காளிமுத்துவிடம் பேசினார். அப்போது ஜெயலலிதா, அவரது உடல்நலத்தை விசாரித்து விட்டு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடக்க வாழ்த்துக் கூறினார்.