இன்று தியாகராஜர் ஆராதனை விழா
திருவையாறு:
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா புதன்கிழமை தொடங்குகிறது.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் கர்நாடக இசை மேதை சத்குரு தியாகராஜரின் ஆராதனை விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு 154 வது ஆராதனை விழா புதன்கிழமை தொடங்கி 15 ம் தேதி வரை நடக்கிறது. புதன்கிழமை மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழாதொடங்குகிறது.
தியாக பிரம்ம மகோத்சவ சபா வின் தலைவர் ஜி.கே.மூப்பனார் தலைமை தாங்குகிறார். செயலாளர் குன்னக்குடி வைத்தியநாதன் வரவேற்றுப்பேசுகிறார்.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குத்துவிளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
11 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் தியாகராஜர் விழாவில் கலந்து கொண்டு பாடுகிறார்கள்.
14 ம் தேதி பொங்கல் அன்று தியாகராஜரின் ஆராதனை விழா காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இதில் புகழ்பெற்ற கர்நாடக இசைபாடகர்கள், நாதசுவர கலைஞர்கள், வயலின் கலைஞர்கள் ஒரே சமயம் 500 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பாடி அஞ்சலி செலுத்துவார்கள்.
தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி ரூ 18 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தியாகராஜர் விருந்தினர் மாளிகையை மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ் முன்னிலையில் ஜி.கே.மூப்பனார் புதன்கிழமை திறந்து வைக்கிறார்.