காஷ்மீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க முடியாது
டெல்லி:
காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தானுடன் உடனடிப் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று என்று உள்துறை அமைச்சர் அத்வானி கூறினார்.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டம் முடிந்த பின் அத்வானி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காஷ்மீர் பிரச்சனை பல்லாண்டுகளாக உள்ளது. இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பாகிஸ்தான், தீவிரவாதிகள் மற்றும் இந்தியா சேர்ந்து பேச்சுவார்த்தைநடத்த முடியாது. அதாவது முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஒருபோதும் சம்மதிக்காது.
காஷ்மீரில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகவும் நிலையாக உள்ளது. காஷ்மீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக அனைத்து முயற்சிகளையும்இந்தியா செய்யும். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் அனைத்து தீவிரவாதிகளையும் அப்புறப்படுத்துவதே இந்தியாவின் குறிக்கோள்.
ஜம்மு காஷ்மீரில் வன்முறையை குறைப்பதற்காக சண்டைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. தற்போது சண்டைநிறுத்தம் குடியரசு தினம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் சண்டைநிறுத்தத்தையும் விட முக்கியமாக எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவ வீரர்களை உஷார்ப்படுத்துவது நல்லது என்றும், பாதுகாப்பைமுன்பை விட அதிகரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தினால் வன்முறையும், துப்பாக்கிச் சண்டை ஏற்படுவதும் பெருமளவு குறையும் என்று பாரதியஜனதா கருதுகிறது.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்புக்கள் லஸ்கார் ஈ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின், ஹர்கத்துல் முஜாஹிதின் ஆகிய அமைப்புக்கள் தங்களது நடவடிக்கைகளைமிகவும் குறைத்துக் கொண்டுள்ளன.
ஆனால் அதே நேரம் டெல்லி செங்கோட்டையில் லஸ்கார் ஈ தொய்பா தீவிரவாதிகள் தாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.