வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் தென்னக ரயில்வே
கோவை:
தென்னக ரயில்வேயின் வர்த்தகம் கடந்த ஆண்டு 16 சதவீதம் உயர்ந்துள்ளது என தென்னக ரயில்வேயின் பொது மேலாளார் அஜித் கிஷோர் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் வழியில் கோவை ரயில்நிலையத்தில் நிருபர்களுக்கு அஜித் கிஷோர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தென்னக ரயில்வே கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது. மேலும் சரக்குகளைக் கையாளும் திறனும் அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம்வரை பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மொத்த வர்த்தகத்தில் இது 16 சதவீத உயர்வடைந்துள்ளது. கடந்த நவம்பர் வரை முந்தைய ஆண்டை விட30 மில்லியன் டன் சரக்குகளை தென்னக ரயில்வே கூடுதலாகக் கையாண்டுள்ளது.
கடலூர் சேலத்திற்கு இடையே மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் கடலூரிலிருந்து விழுப்புரம் வரையில் பாதைசீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
சுற்றுலா ரயில் விடுவதற்கான முழு அதிகாரம் தென்னக ரயில்வேயிடம் இல்லை. இதில் சுற்றுலாத் துறை முன் வரைவு தர வேண்டும். எனவேசுற்றுலா ரயில்விட சுற்றுலாத் துறைதான் பெரும் பங்கு வகிக்கிறது.
கோவை திருப்பதி இடையே விடப்பட்ட ரயிலை கால நீட்டிப்பு செய்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பொதுமக்களுக்கு இந்த ரயில் நீண்ட காலபயனளிக்கும் என்றால், இதனை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும்.
ரயில்வே கால அட்டவணையில் மாற்றங்கள் செய்வது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.