வாழப்பாடி கூட்டணிக்கு வேண்டாம் .. ராமதாஸ்
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தொடரக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ்திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
கடந்த 9 ம் தேதி நான் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினேன். இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசினோம். முதல்வர் என்னிடம் தமிழகராஜீவ் காங்கிரஸ் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடரக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இந்த முடிவில்மாற்றம் எதுவும் இருக்கிறதா என்று கேட்டார்.
கண்டிப்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக ராஜீவ் காங்கிரஸ் தொடரக் கூடாது என்று கூறினேன். தராகா தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி,பாமக வை மட்டுமின்றி மதிமுக வையும் விமர்சித்து வருகிறார். மதிமுக வுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று குற்றச்சாட்டுக்களைஅள்ளி வீசி வருகிறார்.
நான் முதல்வரிடம் 3 கோரிக்கைகளை முன் வைத்தேன். அவைகள் தமிழகத்தில் பாமக ஆட்சியில் பங்கு கேட்காது. ஆனால் பாண்டிச்சேரியில் பாமகஆட்சியமைய வழி விட வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியை நீக்கியே தீர வேண்டும். தராகா உள்ள கூட்டணியில் பாமக இருக்காது.
தமிழக தேர்தலில் பாமக வின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பாமக வுக்கு 30 தொகுதிகளைத் தர வேண்டும் என்பவையாகும் என்றார் ராமதாஸ்.