சட்டசபை நாளை கூடுகிறது
சென்னை:
தமிழக சட்டப் சபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
சட்டசபைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் வரவுள்ளதால், இந்தக் கூட்டமே கடைசிக் கூட்டமாக இது இருக்கும். எனவே இக்கூட்டம்,முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் கூட்டம் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடராக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத் தொடரின் முதல் நாளான வெள்ளிக்கிழமை கவர்னர் பாத்திமா பீவி உரை நிகழ்த்துவார். உரையை சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் தமிழில்வாசிப்பார்.
இந்த உரையில் தமிழக அரசின் திட்டங்கள், கொள்கைகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். கவர்னர் உரையுடன் முதல் நாள் கூட்டத்தொடர் முடிவடையும்.இதன் மீதான விவாதம் ஜனவரி 20 ம் தேதி நடக்கும். ஜனவரி 29 ம் தேதி முதல்வர் கருணாநிதி இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார். அதற்குப்பிறகு பட்ஜெட் மீதான விவாதம் ஒரு சில நாட்களுக்கு இருக்கும் என்று அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இக்கூட்டத்தில் மதுரை துணை மேயர் மிசா. பாண்டியன் விவகாரத்தை எதிர்கட்சிகள் பெரிதுபடுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.