பிஜியில் வாழும் இந்தியப் பெண் கைது
சுவா:
கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான பிஜியில் வாழும் இந்தியப் பெண்ணைப் பிஜி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
அவர் பெயர் ஷரீன் பானு. வயது 25. அவர் தனது 7 வயது மகள் பரினா பிபியை கொலை செய்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டார். அவரை பிப்ரவரி 5ம் தேதி வரை காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
பரினா பிபி, பள்ளியில் சேர்ந்த இரண்டாவது நாளில் அந்தச் சிறுமியை ஷரீன் பானு கொலை செய்தார். அவர்கள் வசித்து வரும் பிஜித் தீவின் மேற்குப் பகுதியில்உள்ள ராக்கிராக்கி என்ற இடத்தில் உள்ள சாக்கடையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 7 வயதேயான சிறுமியை அவர் எதற்காகக் கொலைசெய்தார் என்று தெரியவில்லை.
இச்சம்பவம் குறித்துப் போலீஸார் கூறுகையில், இறந்த சிறுமியின் கழுத்தில், காயங்கள் இருந்ததாகத் தெரிவித்தனர். மேலும் அவர் எதற்காக கொலைசெய்யப்பட்டு பக்கத்திலுள்ள சாக்கடையில் வீசப்பட்டார் என்பது குறித்துத் தகவல்கள் எதுவும் இல்லை.
பெற்ற குழந்தையைத் தாயே கொன்றது தொடர்பாக அவரை நாங்கள் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.