குவிகிறது நிவாரணம்
டெல்லி:
குஜராத் சாணக்கியா பூரியிலுள்ள குஜராத் பவனில் பூகம்பத்தையடுத்து, பொதுமக்கள் கொடுக்கும் நிவாரணப் பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
குஜராத் பவனில் நிவாரணப் பொருட்களை வைக்க இடமில்லாத அளவுக்கு, இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் குவிந்தவண்ணம் உள்ளன. குஜராத் பவனுக்கு வரும் நிவாரணப் பொருட்களை அடுக்கி வைக்கும் பணியிலும், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைக்கும்பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத் பவன் முழுவதும் துணிமணிகள், உணவுப்பொருட்கள், கம்பளிகள், மருந்துப் பொருட்கள் என்று எங்கு பார்த்தாலும் நிவாரணப் பொருட்களாகவேகாட்சியளிக்கின்றன. டாக்சி, கார், பஸ், ஆட்டோக்கள் மற்றும் நடந்து வந்தும் பொதுமக்கள் நிவாரணப் பொருட்களைக் கொடுத்து வருகிறார்கள்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலுள்ள மக்கள் குஜராத் மக்களுக்காக எந்த விதத்திலாவது உதவி செய்யத் தயாராக இருக்கிறார்கள். சிலர் ரத்ததானம் செய்ய வேண்டுமானால் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்? உயிருக்குப் போராடும் நிலையிலுள்ளவர்களுக்கு உதவி செய்யத் தயாராகஉள்ளோம் என்றும் விசாரித்துச் செல்கிறார்கள்.
நிவாரணப் பொருட்கள் அளிக்க வந்த டாக்டர் நரேந்திர சிங் கூறுகையில், நான் இன்று குஜராத் மக்களுக்கு பண உதவியும், கம்பளிகளும்கொடுத்துள்ளேன். இன்னொரு நாள் ரத்த தானம் செய்வேன். குஜராத் மக்களுக்கு நமது உதவி கண்டிப்பாகத் தேவை. நாம் அனைவரும் அவர்களுக்குஉதவி புரிய வேண்டும் என்றார்.
குஜராத் பவனில், குஜராத் பூகம்ப நிவாரண நிதி பிரிவை மேற்பார்வையிடும் சர்மா என்பவர் கூறுகையில், பொதுமக்கள், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிதியுதவி செய்யத் தயாராக இருக்கிறார்கள். தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. பெரும்பாலான பொருட்கள்மருந்துகள், உணவுப்பொருட்கள், துணிமணிகள், கம்பளிகள் ஆகியவை அதிகமான அளவில் வந்து குவிந்துள்ளன என்றார்.
யு.என்.ஐ.