பரிதாப நிலையில் நிவாரணம்
பச்சாவ் (குஜராத்):
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு கொண்டு செல்ல வழியில்லாமல் துணிமணிகள் கட்ச் மாவட்டநெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன.
குஜராத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து இந்தியா மட்டுமன்றி வெளி நாடுகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள், நிதியுதவிகள் குவிந்தவண்ணம் உள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுக்கப்பட்ட துணிமணிகள் அகமதாபாத் - பூஜ் நெடுஞ்சாலையில் கிடக்கின்றன.அவற்றை தொலைதூர கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் இந்த அவல நிலை.
அகமதாபாத் - பூஜ் நெடுஞ்சாலையில் செல்லும் சாலையோரச் சிறுவர்கள் துணிவகைகளைக் கிளறி தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டுசென்று விடுகிறார்கள். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்டம் மற்றும் பூஜ் நகரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, மருந்துப்பொருட்கள், குடிநீர் மற்றும் நிவாரணப்பொருட்கள் எதுவுமேயில்லை.
ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்திற்குப்பின், இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்து குவிந்த நிவாரணப் பொருட்கள் குஜராத்துக்குக்கொண்டு செல்லப்பட்டன. இருப்பினும் முறையான விநியோகம் இல்லாத காரணத்தால் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் இன்னும் நிவாரணப்பொருட்கள் கிடைக்காமல் பரிதவித்து வருகிறார்கள்.
அரசு சாரா நிறுவனங்கள் கட்ச் மற்றும் பூஜ்ஜில் முகாமிட்டு குடிநீர், உணவு, ஆகியவற்றை சாலையோரங்களில் தவித்து நிற்கும் மக்களுக்கு விநியோகித்துவருகிறார்கள். ஆனால் பச்சாவ் நகரத்திலுள்ள பல கிராம மக்கள் இன்னும் குடிதண்ணீர் கூட கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பச்சாவ் நகரையடுத்து இருக்கும் பல நகரங்களில் மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளுக்கிடையில்சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.