கலிபோர்னியா உதவுகிறது
சான்பிரான்சிஸ்கோ:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்காவின்கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்திய அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
குஜராத்துக்கு நிவாரணம் வழங்கும் கலிபோர்னியா கமிட்டித் தலைவர் அசோக் பட் நிருபர்களிடம் கூறியதாவது:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் மிகவும் மோசமான நிகழ்வாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக 6 மில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ள மருந்துப்பொருட்கள், கம்பளிகள், அத்தியாவசிய உணவுப் பொட்டலங்கள் ஆகியவை கலிபோர்னியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா நகரிலுள்ள ஈஸ்ட் கோஸ்ட் கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் 60, 000 டாலர்கள் பெறுமானமுள்ள பொருட்கள் கொடுக்கப்பட்டன.சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஏர் இந்தியா ஜூம்போ ஜெட் விமானம் மூலம் நியுயார்க்கில் உள்ள கே.கே.எஃப். விமான நிலையத்திலிருந்து நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருங்கிணைப்பாளர் அபிஜித் ஹெல்டர் மேற்பார்வை செய்வார்.
சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த பிஹா பாரகி படேல் என்பவரும், அவரது குடும்பத்தாரும் சேர்ந்து 25, 000 டாலர்கள் குஜராத் பூகம்ப நிவாரணநிதியாகக் கொடுத்துள்ளார்கள். சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள சீன வர்த்தக மையம் 10,000 டாலர்களைக் கொடுத்துள்ளது என்றார்.
குஜராத் மாநிலமும், கலிபோர்னியாவும் துறைமுக நடவடிக்கைகள், தொழில் நுட்பத் துறை ஆகியவற்றில் இணைந்து செயல்பட்டு வந்தது. இந்தியாவில்தொழில்துறையில் மிகவும் சிறந்து விளங்கும் மாநிலம் குஜராத். பொருளாதாரத்தில் கலிபோர்னியாவுடன் இவ்வளவு நாட்கள் வரை இணைந்துசெயல்பட்டு வந்தது. உலகிலேயே கலிபோர்னியா பொருளாதாரத்தில் 7 வது இடத்தில் இருக்கிறது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.