எங்கள் கூட்டணி மதச்சார்பற்றது .. கருணாநிதி
சென்னை:
தேசிய ஜனநாயக முன்னணி மதவாத முன்னணி அல்ல தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தெரிவித்தார்.
சென்னையில் நடந்த திருமண விழாவில் பங்கேற்று பேசிய கருணாநிதி கூறியதாவது:
தே.ஜ. கூட்டணியில் சேரும் போது அது மதசார்பற்ற கூட்டணியாக செயல்படும் என உறுதி அளிக்கப்பட்டது. வாஜ்பாய் அரசு அதை நிரூபித்து அதன்படிசெயல்பட்டு வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் மதவாத பா.ஜ.க.வுடன் சேர்ந்ததால் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக வேண்டிய கட்டாய சூழ்நிலைஏற்பட்டதாக கூறியது. இப்போது த.மா.க., தே.ஜ. கூட்டணிக்கு வரவேற்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் தேவே கெளடா பல கோவில்களும் சென்று வழிபாடு நடத்துகிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கும்பமேளாவில் கலந்துகொண்டு புனித நீராடினார்.
சாதுக்களுக்கு எதிராகவும், மடங்களுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி மதசார்பற்றவர்கள் என பறைசாற்றிக் கொண்டவர்கள் இவர்கள்.இவர்கள் தான் வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள்.
ஆனால் மதவாதி என முத்திரை குத்தப்பட்ட வாஜ்பாயும், தலைவர்களும் கும்பமேளாவிற்கு செல்லவில்லை. மக்கள் இனியும் மதவாதம்,மதசார்பற்ற கட்சி போன்ற பிரச்சாரங்களைக் கண்டு ஏமாற மாட்டார்கள். தேசிய ஜனநாயக முன்னணி மத சார்பற்ற கூட்டணி என மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.