காற்றாலை மின்சாரத்தின் கவலை
கோயம்புத்தூர்:
காற்றாலை மின்சாரத்திற்கு குறைந்த விலையே கொடுக்கப்படும் எனும் தமிழக மின்வாரியத்தின் முடிவால் தமிழ்நாட்டில் உள்ள காற்றாலை மின்னுற்பத்திநிலையங்கள் விரைவில் மூடக்கூடிய அபாயமுள்ளதாக காற்றாலை மின்னுற்பத்தியாளர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
இச்சங்கத்தின் செயலாளர் கஸ்தூரிரங்கன் வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழக மின்வாரியம் புதிதாக காற்றாலை உற்பத்தி நிலையங்கள் அமைப்பவர்களிடம் மிகக்குறைவான விலைக்கே மின்சாரத்தை வாங்க முடிவு செய்துள்ளது.
தற்போது வழங்கப்படும் யூனிட்டிற்கு ரூ.2-70 என்ற விலை , இனிமேல் சாதாரண நேரங்களில் யூனிட்டிற்கு ரூ.1-57 என்ற விலையிலும், மின்நுகர்வுஅதிகம் உள்ள (பீக் அவர்ஸ்) நேரங்களில் யூனிட்டிற்கு ரூ.2-25 என்ற விலையிலும் இருக்கும்.
மின்வாரியத்திடமிருந்து உற்பத்தியாளர்கள் பெறும் மின்சாரத்திற்கான விலை மிகவும் அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிராவின் என்ரான் நிறுவனத்திற்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.7ம், வாசவி நிறுவனத்திற்கு ரூ.5ம் வழங்கப்படும்போது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதகாற்றாலை மின்சாரத்திற்கு குறைந்த விலை கொடுக்க முடிவு செய்திருப்பது சரியல்ல.
தமிழக மின்வாரியத்தின் நடவடிக்கையால் இனி காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள் தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு மாற்றப்படக்கூடும் என்றுதெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.