காதலர் தினத்தன்று அரங்கேறிய சோகம்
சேலம்:
காதலித்தவரை மணமுடித்தவர் வரதட்சணை கொடுமையால் காதலர் தினத்தன்று தூக்கில் தொங்கினார்.
சேலத்தைச் சேர்ந்த புனிதா, மருத்துவத்துறை பட்டம் (பி.பி.டி) பெற்றவர். அவர் சுரேஷ் என்ற கால்நடை மருத்துவரை காதலித்து மணமுடித்தவர். இருவரின்பெற்றோரும் எதிர்த்ததால் போலீசார் தலையிட்டு திருமணம் நடத்தி வைத்தனர்.
திருமணத்திற்கு பின் சுரேஷ் உடுமலைப்பேட்டையில் பணிபுரியச் சென்ற நிலையில், புனிதாவை வரதட்சிணை கேட்டு சுரேஷின் பெற்றோர் நச்சரித்துள்ளனர்.இதனை ஒரு முறை தன் அம்மாவிற்கு தெரிவித்த புனிதா, காதலர் தினத்தன்று தான் காதலித்து மணமுடித்தவரை பிரிய முடிவு செய்து தூக்கில் தொங்கியுள்ளார்.
தன்னுடைய கணவரையும், குழந்தையையும் பிரிய மனமில்லாமல் பிரிவதாகவும், தன்னுடைய சாவிற்கான காரணம், தன் குழந்தையை வளர்க்க வேண்டியது,தன் இறுதிச்சடங்கை நடத்த வேண்டிய முறை, அதில் கலந்து கொள்ள வேண்டியவர்களின் விபரங்களையும் நான்கு கடிதங்களில் எழுதி வைத்துள்ளார். இவரின் மரணம்குறித்து கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) விசாரணை நடத்தி வருகிறார்.