கோவை வருகிறார் கருணாநிதி
கோவை:
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை திறந்து வைக்கவும், உடுமலையில் உள்ள நாராயண கவி மண்டபத்தை திறக்கவும் முதல்வர் கருணாநிதி பிப்ரவரி23 ம் தேதி கோவை வருகிறார்.
கோவைக்கு நீண்ட நாட்களாக வருகை தர வேண்டும் என்று நினைத்திருந்த முதல்வரின் திட்டம், பல்வேறு காரணங்களால் 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது.இதையடுத்து தற்போது நான்காவது முறையாக, முதல்வரின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 23 ம் தேதி கோவை வர இருக்கிறார். இங்கு அமைத்துள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைக்கிறார்.முன்னதாக உடுமலைப் பேட்டையில் நாரயண கவி மண்டபத்தையும் திறந்து வைத்துப் பேசுகிறார்.
கோவையில் ஒண்டிப்புதூர்., வாலங்குளம் பைபாஸ் ரோடுகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
கோவையில் தி.மு.க.வில் இரு கோஷ்டி மோதலுக்குப் பிறகு முதல்வர் வருகை தருகிறார். இரு தரப்பினரும், போட்டி போட்டுக் கொண்டு வரவேற்புவேலைகளில் மும்முரமாகக் களம் இறங்கியுள்ளனர்.