மாறனுக்குப் போலீஸ் காவல் நீட்டிப்பு
சென்னை:
வீரப்பனின் முக்கிய கூட்டாளியும், தமிழ் தேசிய விடுதலை படை இயக்கத்தின் தலைவருமான மாறனின் போலீஸ் காவலை மார்ச் மாதம் 2-ம் தேதி வரைநீடித்து தடா நீதிமன்ற நீதிபதி சின்னபாண்டி உத்தரவிட்டுள்ளார்.
மாறன் செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு தடா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு விசாரணை மாலை 5 மணி வரை நடந்தது.
இவர் குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தைத் தாக்கிய வழக்கிலும், விழுப்புரத்தில் நடந்த தொடர் குண்டு வழக்கு குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
மாறனை விசாரணை செய்ய மேலும் 5 நாட்கள் தேவை. எனவே அவரது காவலை நீடிக்க வேண்டும் என க்யூ பிரிவு டி.எஸ்.பி கலியமூர்த்தி கேட்டுக்கொண்டார். அதன் படி மாறனின் போலீஸ் காவலை மார்ச் மாதம் 2-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
முன்னதாக மாறன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதும் மாறனின் வக்கீல், மாறன் சேலம் சிறையில் தனிமையில் அடைக்கப்பட்டிருப்பதால் அவர் கடும்மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இது விதிகளுக்கு புறம்பானது. மனித உரிமைக்கும் புறம்பானது.
இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 10 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மாறனையும் திருச்சி சிறைக்கு மாற்றவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அரசு தரப்பின் சிறப்பு வக்கீல் மாறன் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாரா என உறுதி செய்யப்பட்ட பின் பதிலளிப்பதாக கூறினார்.
நீதிபதி தீர்ப்பளிக்கும் முன் மாறனிடம் ஏதேனும் காயம் ஏற்பட்டிருக்கிறதா என கேட்டதற்கு அவர் இல்லை என பதிலளித்தார். ஆனால் நெஞ்சு வலிஇருக்கிறது என கூறினார்.
போலீஸ் காவலுக்கு செல்ல தயாரா என கேட்டதற்கு, போலீசார் என்னிடம் 2 நாட்கள் விசாரித்து விட்டார்கள். அதனால் போலீஸ் காவலுக்கு செல்லவிரும்பவில்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில் நான் சிறப்பு அதிரடிப்படை வீரர்களால் இந்த மாதம் 12-ம் தேதி சிதம்பரத்தில் இருக்கும் என் வீட்டில் கைது செய்யப்பட்டேன்.
என்னை கோயம்புத்தூரில் இருக்கும் மாஜிஸ்திரேட் வீட்டிற்கு இரவு 7 மணிக்கு அழைத்துச் சென்றார்கள். மாஜிஸ்திரேட்டிடம் எதையும் கூறுவதற்கு எனக்குவாய்ப்பளிக்கப்படவில்லை என்றார்.
சிறப்பு அரசு வழக்கறிஞர் இதை மறுத்தார். வீரப்பனை தேடும் பணியில் இருந்த சிறப்பு அதிரடிப் படை வீரர்களால் மாறன் காட்டில் தான் கைதுசெய்யப்பட்டார் என்றார்.
இதையடுத்து மாறனின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என மாறனின் வக்கீல் கேட்டுக் கொண்டார். ஆனால், நீதிபதி இது குற்றவாளியின் முதல்வாக்குமூலமாக இருந்தால் மட்டுமே பதிவு செய்யமுடியும். அவர் இப்போது கூறியதை கோயம்புத்தூரில் மாஜிஸ்திரேட்டிடம கூறியிருக்க வேண்டும் என்றார்.
பின் மாறனின் காவலை நீட்டித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மாறன் நீதிமன்றத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டதும் அவரை நெருங்கி புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிக்கையின் புகைப்படக்காரர்கள்போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டனர். சில நிருபர்களும் தாக்கப்பட்டனர். புகைப்படக்காரர்களின் காமிராக்களும் சேதமடைந்தன.
இதனால் கோபமடைந்த நிருபர்கள் மாறன் சிறைக்கு கொண்டு செல்லப்படுவதற்காக வைக்கப்படிருந்த வேனின் முன் அமர்ந்து மறியல் செய்தனர். இந்தமறியல் அபைர மணி நேரம் நடந்தது.
இணை கமிஷனர் இளங்கோவன், நிருபர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்கப்படும். காமிராக்களின் பாகங்கள் சேதப்பட்டிருந்தால் அவை மாற்றிக்கொடுக்கப்படும் என உறுதியளித்த பின் நிருபர்கள் மாறன் இருந்த வேனை செல்ல அனுமதித்தனர்
பின்னர் தனியார் தொலைக்காட்சி நிறுவன புகைப்படக்காரர்கள் போலீஸ் தாக்கப்பட்டது குறித்தும், காமிராக்கள் சேதமடைந்தது குறித்தும் நீதிமன்றவளாகத்துக்கு உள்ளே இருக்கும் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
யு.என்.ஐ.