ரேஷன் கார்டைக் காட்டி ஓட்டுப் போடலாமா?
சென்னை:
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, அடையாள அட்டை பெறாதவர்கள், ரேஷன் கார்டை காட்டினாலே வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனதேர்தல் ஆணையரிடம் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழக தேர்தல் ஆணையர் மிருத்துஞ்சய் சாரங்கி கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கியமான 11 தமிழக அரசியல் கட்சிகளும் இந்தகோரிக்கையை விடுத்துள்ளன.
இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த சாரங்கி கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை கிடைக்காதவர்கள் ரேஷன்கார்டு போன்றவற்றை காட்டி வாக்களிக்கஅனுமதிக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
நான் இவர்களது கருத்துக்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்பேன். அவர்கள் இது குறித்த முடிவை உரிய நேரத்தில் அறிவிப்பார்கள் என்றார்.
இதுநாள் வரை வாக்காளர் அடையாள அட்டை தேவை என தேர்தல் ஆணையம் வற்புறுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இருக்கும் 4.76 கோடி வாக்காளர்களில் 3.2 கோடி வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டது. இது வரைவாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் வாக்காளர் அட்டை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதுஅவர்களுக்கான இறுதி வாய்ப்பு எனவும் சாரங்கி தெரிவித்தார்.
யு.என்.ஐ.