கல்கத்தா டெஸ்ட்: பாட்டில்கள் கொண்டு வர தடை
கல்கத்தா:
கல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள், கூல்டிரிங்ஸ் பாட்டில்கள் போன்றவற்றை ரசிகர்கள் எடுத்துவர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி கல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் மார்ச் 11ம் தேதி துவங்குகிறது. இதனையொட்டிபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் மோசமான ஆட்டத்தை காண விரும்பவில்லையெனில், கல்கத்தா ரசிகர்கள் கையில் இருக்கும் பாட்டில்கள் போன்றவற்றைமைதானத்தில் உள்ள வீரர்கள் மீது எறிவது வழக்கம்.
96ம் ஆண்டில் இந்திய - இலங்கை அணிகள் மோதிய உலகக்கோப்பைக்கான அரையிறுதி ஆட்டத்தில் ரசிகர்களின் கலாட்டா தாங்க முடியவில்லை.
அனைவரையும் வெளியேற்றிவிட்டு வீரர்கள் மட்டும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இதே கொடுமைதான் இந்திய - பாகிஸ்தான் டெஸ்ட் மேட்சின் போதும் நிகழ்ந்தது. இதனால் ரசிகர்களின்றி போட்டி நடைபெற்றது.
தற்போது நடைபெறவுள்ள போட்டியின் போதாவது ரசிகர்கள் டெஸ்ட் போட்டியை உருப்படியாக ரசிப்பார்களாக என தெரியவில்லை.
ஏனெனில், காலரிக்குள் 500 போலீசாரும், காலரிக்கு வெளியே 800 போலீசாரும் காவலுக்கு வருகின்றனர். இவர்களோடு போலீஸ் துணைஆணையர்கள் 14 பேர் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள இருக்கின்றனர்.
இத்தகவல்களை கல்கத்தா போலீஸ் அதிகாரி ராஜ் கனோஜியா நிருபர்களிடம் தெரிவித்தார்.
யு.என்.ஐ.