முல்லைவேந்தன் ராஜினாமா செய்ய முதல்வர் உத்தரவு
சென்னை:
இந்து அறநிலையத்துறை அதிகாரியை தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய தமிழக அமைச்சர் முல்லை வேந்தனை ராஜினாமா செய்யும்படி தமிழக முதல்வர்கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோயில் நிலங்களை குத்தகைக்கு விடுவதற்கான ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. இதற்கு அறநிலையத்துறையினர்ஏற்பாடு செய்திருந்தனர்.
அறநிலையத்துறை அதிகாரி அன்புமணி, கோவில் நிலத்தை செய்தித்துறை அமைச்சர் முல்லைவேந்தனுக்கு வேண்டியவர்களுக்கு கொடுக்க மறுத்தார்.
மேலும் டெண்டர் மூலமே குத்தகைதாரர் முடிவு செய்யப்படுவர் என கூறிய அந்த அதிகாரியை அமைச்சரின் ஆட்கள் "சரியாக கவனித்து"விட்டனர்.
அமைச்சருடைய ஆட்களின் சித்ரவதை தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற அதிகாரியை கலெக்டரின் உத்தரவின்பேரில் போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளை தொடர்ந்து, அமைச்சரின் முன்னிலையில் நடைபெற்றஇச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டார் முதல்வர். சி.பி.சி.ஐ.டி.யின் அறிக்கைவியாழக்கிழமை காலை முதல்வரிடம் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில், அதிகாரியின் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்யுமாறுஅமைச்சர் முல்லைவேந்தனுக்கு உத்தரவிட்டார் முதல்வர்.
அற நிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஏலம் விடும் பிரச்சனையில் தலையிட்டதற்கு பொறுப்பேற்றுராஜினாமா செய்யுமாறு கோரியுள்ளார் முதல்வர்.
வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்ட உத்தரவு அமைச்சரின் பி.ஆர்.ஓ மூலம் கிருஷ்ணகிரியில் இருந்தஅமைச்சருக்கு அனுப்பப்பட்டது.
இதனையடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் அமைச்சர் முல்லைவேந்தன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த சமத்துவபுரங்கள் திறப்புவிழா உள்ளிட்ட பல்வேறு அரசு விழாக்களை தவிர்க்க முடியாதகாரணங்களுக்காக வேறு தேதிக்கு ஒத்தி வைப்பதாக மாவட்ட கலெக்டர் ராஜேந்திர குமார் தெரிவித்தார்.
யு.என்.ஐ.