திமுகவிடம் 5 தொகுதி கேட்கிறது உழவர் உழைப்பாளர் கட்சி
ஈரோடு:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எங்களுக்கும் 5 இடம் வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது ஒரு அணியில் நின்று, எங்காவது ஓரிரு இடங்களைப் பெற்று வெற்றி தோல்வியைச் சந்தித்துவந்துள்ளது உழவர் உழைப்பாளர் கட்சி. இக் கட்சியின் தலைமையகம் திருப்பூரில் செயல்பட்டு வருகிறது.
திருப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஓரளவு செல்வாக்கு இந்தக் கட்சிக்கு உண்டு. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நாரயணசாமிநாயுடு தலைமையில் விவசாயிகள் சங்கமாக உருவாகியது. பின்னர் அரசியல் கட்சியாக உருவாகியது.
15 ஆண்டு காலத்தில், எவ்வித வளர்ச்சியுமின்றி குறும் கட்சியாகவே உள்ள இந்த கட்சிக்கு செல்லமுத்து தலைவராக உள்ளார்.
கடந்த பல தேர்தல்களில் இந்தக் கட்சி சில தொகுதிகளில் நின்று வென்றுள்ளது. இக் கட்சிக்குப் பக்கபலமாகக் கூட்டணிகள்மட்டுமே இருந்து வந்துள்ளது. கபிலர்மலை, கிணத்துக் கடவு, பொங்கலூர் ஆகியவற்றில் தொடர்ந்து ஏதாவது ஒரிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது இக்கட்சி.
இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 5 இடங்களைக் கேட்டுப் பெற முடிவு செய்துள்ளது.
இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
உழவர் உழைப்பாளர் கட்சி தொகுதிப் பங்கீடு குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் கருணாநிதியுடன்பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வரும் 13ம் தேதி இறுதி முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.
பொங்கலூர், பல்லடம், கோபி, குறிஞ்சிப்பாடி, ஒட்டன்சத்திரம், கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் எங்களுக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். மேற்கண்ட 5 தொகுதிகளையும் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் கேட்டுப் பெறுவோம்.
அ.தி.மு.க அணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்ததால் அ.தி.மு.க.,விற்கு ஒன்றும் லாபம் இல்லை. மாறாக பாட்டாளி மக்கள்கட்சிக்குத் தான் லாபம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிறு கட்சிகளான மனித உரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றதால் தலித்துகளின் ஓட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தென்னை விவசாயத்தை மேம்படுத்தவும், தொழிலாளர்களின் நலன் காக்கவும் கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைப்போம் என்றார்செல்லமுத்து.