விடுதலைப்புலிகளிடம் தப்பி எமனிடம் சிக்கிய கைதி
கொழும்பு:
விடுதலைபுலிகள் கருணை காட்டிய போதும் எமன் கருணை காட்டாததால் புலிகள் விடுவித்த பணயக் கைதி ஒருவர் மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்தார்.
இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் தனி ஈழம் கோரி போராடும் விடுதலைப்புலிகள் சிங்கள மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
தற்போது போர் நிறுத்தம் அறிவித்துள்ள புலிகள் நல்லெண்ண நடவடிக்கையாக தாங்கள் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளில் நால்வரை விடுவித்தனர்.
அவர்களில் ஒருவர் அமரசிங்கே(45) என்பவர். விவசாயியான இவர் தான் விடுதலை பெற்றவுடன், தனது வேண்டுதலை நிறைவேற்ற தேவையானதேங்காய்களை பறிக்க தென்னை மரத்தில் ஏறினார்.
தேங்காய் பறிக்கும் போது தவறி விழுந்ததால் படுகாயமடைந்த அவர் மருத்துவ மனைக்கு கொண்டு போகும் வழியில் இறந்தார் என இலங்கைபோலீஸ் தெரிவிக்கிறது.
அமரசிங்கே புத்த மதத்தை சேர்ந்தவர். அங்குள்ள சிங்களர்கள் பலர் இந்து கோவில்களில் பிரார்த்தனை செய்வது சாதாரணமான ஒன்றாகும்.