பிறந்த வீட்டு கதவைத் தட்ட வாழப்பாடி திட்டம்
சென்னை:
திமுக கூட்டணி சீட் ஒதுக்காததால் அக்கூட்டணியில் இருந்து ஒதுங்கிய வாழப்பாடி ராமமூர்த்தி தற்போது தனது தாய்வீடான காங்கிரஸ் நோக்கிபயணிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு வாழப்பாடி திரும்பினால், அக்கூட்டணியில் உள்ள பா.ம.க.விற்கு சிக்கல் ஏற்படும்.
பா.ம.க. - விடுதலைப்புலிகள் தொடர்பு குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு அக்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்துவார் வாழப்பாடி. இதன் மூலம்அதிமுக கூட்டணியில் இருந்து பா.ம.க.வை வெளியேற்ற காங்கிரஸ் கட்சி நெருக்குதலை ஏற்படுத்தும்.
வாழப்பாடி தனது ஆதரவாளர்களுக்கு சீட் கொடுத்தால் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து விடலாம் எனத் திட்டமிட்டு உள்ளார்.
ஆனால், ஏற்கனவே தலைவர்களால் நிரம்பி வழியும் காங்கிரஸ் கட்சியில் இவரை மீண்டும் சேர்க்கவும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தரப்பிலிருந்துஎதிர்ப்பு கிளம்பும் எனவும் தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகளை ஏற்கனவே தங்கபாலு, அன்பரசு மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்இணைந்து பங்கு போட்டு விட்டனர். தங்களைவிட செல்வாக்கு மிகுந்த வாழப்பாடியை இவர்கள் உள்ளே வரவிடுவார்களா என்பது சந்தேகமே. கட்சிவளராவிட்டாலும் பரவாயில்லை. தங்களுக்கு இன்னும் ஒரு போட்டி வருவதை இவர்கள் நிச்சயம் ஏற்க மாட்டார்கள்.
வாழப்பாடி கோஷ்டிக்கு அங்கு சீட் கிடைப்பது சந்தேகமே. எனினும், தமிழக அரசியல் அரங்கில் தற்போது தேர்தல் கலாட்டா உச்சகட்டத்தில் உள்ளது.எந்த கட்சி எந்த கூட்டணியில் உள்ளது என்பது முடிவாக இன்னும் பல நாட்களாகும். அதுவரை குட்டிக் கட்சிகளும், ஜாதிக் கட்சிகளும் ஆட்ராராசா.... ஆட்ரா ராசா... என்று ஒரு கூட்டணியிலிருந்து இன்னொரு கூட்டணிக்கு கூடு பாய்ந்து கொண்டே இருப்பார்கள்.