டான்சி வழக்கு: ஜெ. மனு மீது ஏப்ரல் 9 ல் விசாரணை
சென்னை:
டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் தனக்குக் கிடைத்த 3 ஆண்டுகள் தண்டனையை ரத்து செய்யுமாறு மேல்முறையீடு செய்த ஜெயலலிதாவின் மனு குறித்து ஏப்ரல் 9 ம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னைஉயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியம், டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்குஅளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்குமாறு ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 9 ம்தேதி நடக்கும் என்று கூறினார்.
முன்னதாக, திங்கள்கிழமை ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில், வருகின்ற சட்டபேரவை தேர்தலில் போட்டியிடஇருப்பதால், டான்சி வழக்கில் எனக்கு தண்டனை அளிக்கும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் எனக்கோரியுள்ளார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இரண்டாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தேர்தலில்போட்டியிட முடியாது.
இதுவரை 4 வழக்குகளில் ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. டான்சி நிலபேர ஊழல்வழக்கை தவிர மற்ற வழக்குகளில் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.
டான்சி வழக்கில் மட்டும் இருவேறு குற்றங்களுக்காக 3 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையைஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.
இரண்டாண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதால் தண்டணையை ரத்து செய்யக்கோருகிறார் ஜெயலலிதா.
தீர்ப்பு ரத்து செய்யப்பட்டால் மட்டுமே ஜெயலலிதா எந்தப் பிரச்சனையும் இன்றி தேர்தலில் போட்டியிட முடியும்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.