திருச்சியில் இன்று திமுக கூட்டணி தேர்தல் பிரசாரம்
சென்னை:
திருச்சியில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறும் திமுக மாநாட்டில், திமுக கூட்டணி தேர்தல் பிரசாரம்தொடங்குகிறது.
தமிழகத்தில் வரும் மே மாதம் 10 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணியில் உள்ளகட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன.
திமுக 171 தொகுதிகளில் போட்டியிடுகிறது. போட்டியிடவுள்ள தொகுதிகளையும் அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை திருச்சியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவைக்கிறார்.
திருச்சி கொட்டப்பட்டு அண்ணாநகரில் மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசார தொடக்கவிழாவும், திமுக மாநாடும்நடக்கிறது. கருணாநிதி தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
மாநாட்டில் அமைச்சர்கள் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.
பாஜக சார்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.அதிமுகபொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன், தமிழர் பூமிநிறுவனர் கு.ப.கிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, ஐக்கிய ஜமாத் கட்சி தலைவர் ஆருண்,கொங்கு வேளாளர் கட்சியைச் சேர்ந்த ராஜா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
தேர்தல் பிரசாரத்தையொட்டி மாலை 3 மணிக்கு நாகூர் ஹனிபாவின் இசைநிகழ்ச்சி நடக்கிறது. அமைச்சர்கே.என்.நேரு அனைவரையும் வரவேற்றுப் பேசுகிறார்.
மாவட்ட செயலாளர் கண்ணன் நன்றி கூறுகிறார். தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்வர்கருணாநிதி ரயில் மூலம் திருச்சி வருகிறார். கருணாநிதி வருகையையொட்டி திருச்சி முழுவதும் திமுக கொடிகள்,தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.
திருச்சி நகரின் முக்கிய இடங்களில் உதயசூரியன் பொறித்த மின் அலங்கார விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன.திருச்சியில் முக்கிய இடங்களில் தொடங்கி மாநாடு நடைபெறும் கொட்டப்பட்டு அண்ணாநகர் வரைஆயிரக்கணக்கான குழல் விளக்குகள் கட்டப்பட்டுள்ளன.