ஓட்டு போட அனுமதியில்லை: பொதுமக்கள் போராட்டம்
சென்னை:
சென்னை தாம்பரம் தொகுதியில் பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத காரணத்தால்வாக்காளர்கள் ஓட்டுப்போட முடியாமல் அவதிப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தாம்பரத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் 2000வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
அவர்களிடம் கேட்டபோது 1998 முதல் 2000 வரை வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களின் பெயர்கள்வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. 2000 மாவது ஆண்டுக்குப்பிறகு வாக்காளர் அடையாள அட்டை பெற்றவாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்றனர்.
தங்களால் ஓட்டுப்போட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணிநேரத்துக்கு தாம்பரம் உள்பட முக்கியச் சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
பின்னர் பரங்கிமலை போலீஸ் அதிகாரி ஒருவர் தாம்பரம் வாக்குச்சாவடிக்கு வந்து, வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளவாக்காளர்களுக்கு ஓட்டுப் போட வழிவகை செய்து கொடுக்கப்படும் என்று கூறிய பிறகே அவர்கள் சமாதானமடைந்தனர்.
கோவையிலும் சாலை மறியல்:
கோவையின் பல இடங்களில் வாக்காளர் அடையாள அட்டையிருந்தும் வாக்களிக்க இயலாத நிலையில் மக்கள் அவதிப்பட்டனர். 10ஆயிரத்திற்கும் அதிகமானோர், பெயர்கள் விடுபட்டதால் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
கோவையில் காலை முதலே பரபரப்பான ஓட்டுப் பதிவு துவங்கியது. 4 மணி நேரத்தில் ஓட்டுப்பதிவு 35 சதவீதத்தை நெருங்கியது.இந்தநிலையில், கோவை கிழக்கு, கோவை மேற்கு , தொண்டமுத்தூர் ஆகிய தொகுதிகளில் பல வாக்களார்கள் தங்களுக்குவாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஒரு சில இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
மூன்று இடங்களில் எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் சரியாக இயங்காததால், அங்கு வேறு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. இந்தபூத்துகளில் 50 நிமிடங்கள் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்பட்டது.
அவிநாசி அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு தேர்தல் பணியாற்ற வந்த ஒருவர், ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றார். இதனால்,அங்கு ஊர் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊர்காவல் படையைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற அவரை போலீசார்உடனடியாக கைது செய்தனர்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் வாக்களார் பெயர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டது பற்றிய புகாரை வேட்பாளர் நேரடியாக மாவட்டகலெக்டரிடம் தெரிவித்தார்.
சிறு சிறு பிரச்னைகள் எழுந்தபோதும் இது வரை வாக்குப் பதிவு அமைதியாகவே நடந்து வருகிறது. உச்சிவெயிலில் மக்கள்வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. எனவே, காத்திருந்த வரிசைகள் காலியானதோடு, ஒரு சிலரே வந்து செல்லும் நிலைஏற்பட்டுள்ளது. பகல் ஒரு மணிக்கு மேல் வாக்குப்பதிவு மந்த நிலையை எட்டியுள்ளது. மாலையில் ஓரளவு வாக்குப் பதிவுநடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.