19-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம்
சென்னை:
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் சனிக்கிழமை நடைபெறும் எனத் தெரிகிறது. புதிய அமைச்சர்கள் பதவியேற்புவிழாவுக்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
மே 10ம் தேதி நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதாமீண்டும் முதல்வராகியுள்ளார். முதல்வராகப் பதவியேற்றபோது அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றனர்.விரைவில் அமைச்சரவை விரிவாக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 19ம் தேதி (சனிக்கிழமை) அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் எனத் தெரிய வந்துள்ளது.இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன. முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுவருகின்றன.
அமைச்சரவை விரிவாக்கத்தின்போது பல புதுமுகங்கள், பெண்கள் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது.புதுமுகங்களுடன் சேர்த்து அனுபவசாலிகளுக்கும் போதிய இடங்கள் தரப்படும் என்று தெரிகிறது.
அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்பு அனைத்து அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கித் தரப்படும்.மொத்தம் 25 அமைச்சர்கள் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்ளஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா மே 24ம் தேதி நடைபெறும். அன்று தற்காலிக சபாநாயகர் பதவியேற்பார்.அதன் பின்பு எம்.எல்.ஏக்கள் பதவியேற்பர். முதல்வர் ஜெயலலிதா எம்.எல்.ஏவாக இல்லை என்பதால் அவர் மட்டும்அன்று பதவியேற்க மாட்டார்.
25-ம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும். சபாநாயகர் பதவிக்கு அதிமுக அவைத்தலைவர் கா.காளிமுத்துவை ஜெயலலிதா தேர்வு செய்து வைத்துள்ளார். துணை சபாநாயகர் பதவிக்கு ஓமலூர்எம்.எல்.ஏ. செம்மலை பட்டியலில் உள்ளார்.