மாறன் கூட்டாளிக்கு 2 ஆண்டு கடுங்காவல்
தர்மபுரி:
தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த பொன்னிவளவனுக்கு வெடிமருந்து பதுக்கல் வழக்கில் இரண்டுஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தமிழ்நாடு விடுதலைப் படை என்ற அமைப்பை மாறன் ஏற்படுத்தினார். இந்த அமைப்பு பல்வேறு தீவிரவாதச்செயல்கள் மற்றும் கொள்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் கூட்டாளியாகசெயல்பட்டு வந்தார் மாறன். கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றபோது அவர்கள் வைத்தகோரிக்கைகளில் ஒன்று விடுதலைப் படையைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பது தான்.
இந்த 5 பேரில் பொன்னிவளவனும் ஒருவர். சேலம் சிறையில் இருந்து வந்த பொன்னிவளவனுக்கு தர்மபுரிநீதிமன்றத்திலும், பிற நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளது.
கடந்த 97ம் ஆண்டு ஆண்டிமடம் போலீஸ் ஸ்டேஷன் மீது நடத்திய தாக்குதல், 98ம் ஆண்டு ஜெயங்கொண்டத்தில்நகைக் கடை கொள்ளை, 99 ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை முன்பு குண்டு வெடிப்பு ஆகிய சம்பவங்களிலும்பொன்னிவளவன் தொடர்புடையதாக வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கொளத்தூர் ஏரிக்கரையில் வெடிமருந்து பதுக்கி வைத்திருந்த வழக்கு தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த வழக்கு தர்மபுரி இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணவதி,வெடிமருந்து பதுக்கல் வழக்கில் பொன்னிவளவனுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துதீர்ப்பளித்தார்.