வீரப்பனை பிடிக்காமல் விட மாட்டேன் .. தேவாரம்
சென்னை:
வீரப்பனை இந்த முறை பிடிக்காமல் விட மாட்டேன் என்று வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ளஅதிரடிப்படையின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் டி.ஜி.பி. வால்டர் தேவாரம் கூறியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் வீரப்பன் கூட்டத்தை வேட்டையாடி அவர்களது உறுப்பினர்களைக் கணிசமாககுறைத்து, வீரப்பனின் கடும் கோபத்துக்கு ஆளான வால்டர் தேவாரம், திமுக ஆட்சிக்கு வந்ததும்அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது மீண்டும் அதிரடிப்படைத் தலைவராக தேவாரம்நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது நியமனம் குறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மலைப்பகுதியில் பிறந்துவளர்ந்தவன் நான். 40 வயதில் எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.
வழக்கமாக அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் இதுபோன்ற களப்பணிகளில் மீண்டும் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். ஆனால் முதல்வர் ஜெயலலிதா என் மீது முழு நம்பிக்கை வைத்து இப்பணியைக்கொடுத்துள்ளார்கள். அவரது நம்பிக்கை பலிக்கும் விதமாக செயல்படுவேன். இது எனக்குக் கிடைத்துள்ளகெளரவம்.
என்னால் இப்போதும் மலை ஏற முடியும். வீரப்பனைப் பிடிப்பது கஷ்டமான வேலையன்று. காட்டுக்குப் போகவேண்டும், அவன் போலவே வசிக்க வேண்டும், அவனை மாதிரியே சாப்பிட வேண்டும். காட்டுக்குள் போய்க்கொண்டே இருக்க வேண்டும். இரண்டு நாள் போய் விட்டு வெளியே வந்து விடக் கூடாது. தொடர்ந்து போய்க்கொண்டே இருக்க வேண்டும். எப்படியும் ஒரு நாள் நமது முயற்சிக்குப் பலனளிக்கும்.
1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முறையாக வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டேன். அந்தநடவடிக்கையில் வீரப்பன் வைத்த கண்ணி வெடியில் சிக்கி 25 பேர் வரை வரை இறந்தனர்.
மே 12ம் தேதி காட்டுக்குப் போனேன். 1994-ம் ஆண்டு நான் விபத்தில் சிக்கும் வரை காட்டுக்குள்தான் இருந்தேன்.
எனது அதிரடி நடவடிக்கை காரணமாக வீரப்பன் கும்பலில் 150 பேர் இருந்த நிலை மாறி 8 பேராக அது குறைந்தது.டி.எஸ்.பி.சிதம்பரநாதன் உள்ளிட்ட 3 பேர் கடத்தப்பட்டபோது அவர்களை மீட்பதற்காக நானே ரிஸ்க் எடுத்து5000 அடி உயர நீலகிரி மலையில் இறங்கி வந்தேன். அப்போது எனக்கும் வீரப்பன் கும்பலுக்கும் இடையேநேரடித் துப்பாக்கிச் சண்டை நடந்தது. வீரப்பன் தான் முதலில் சுட்டான். நான் திருப்பிச் சுட்டேன். இறுதியில்வீரப்பன் கும்பல் தப்பியோடியது. அவர்களது கும்பலைச் சேர்ந்த 3 பேர் சரணடைந்தனர்.
1994ம் ஆண்டு கணக்குப்படி வீரப்பனிடம் 5 பேரே இருந்தனர். அதன் பிறகு நிலைமை மாறி விட்டது. வீரப்பனைப்பிடிக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்படவில்லை. ஆட்சி மாற்றத்தால் நான் வேறு பணிக்கு மாற்றப்பட்டேன்.
இந்த முறை எனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வேன். நிச்சயம் வீரப்பனைப்பிடிப்பேன். வீரப்பனுக்கு பொது மன்னிப்பு என்பதே கிடையாது. அவன் ஏராளமானோரைக் கொன்றவன். அவனைமன்னிக்கவே முடியாது என்றார் தேவாரம்.