2 வாரத்தில் வீரப்பன் வேட்டை தீவிரமாகும்... தேவாரம்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் பணி இன்னும் 2 வாரத்தில் தீவிரமாக்கப்படும் என்று வீரப்பனைப் பிடிக்கும்பணியில் புதிதாக அமர்த்தப்பட்டுள்ள முன்னாள் தமிழக டி.ஜி.பி. வால்டேர் தேவாரம் கூறியுள்ளார்.
வீரப்பனைப் பிடிக்கும் பணியை முதல்வர் ஜெயலலிதா முடுக்கி விட்டுள்ளார். முதல் கட்டமாக வீரப்பனைப்பிடிக்கும் அதிரடிப்படையின் புதிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. வால்டேர் தேவாரத்தை நியமித்துள்ளார்.அவருக்கு உதவியாக எல்லைப் பாதுகாப்புப் படையின் ஐஜியாக தற்போது உள்ள விஜயகுமார்அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வீரப்பன் வேட்டை தொடர்பான பணிகள் குறித்து உள்துறை செயலாளர் நரேஷ் குப்தாவுடன்புதன்கிழமை கோட்டையில் தேவாரம் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், வீரப்பனைப் பிடிக்கும் பணி தற்போது டி.எஸ்.பி.தமிழ்ச்செல்வன் தலைமையில் தீவிரமாக நடந்து வருகிறது.
ஐ.ஜி. விஜயக்குமார் மத்திய அரசு பணியில் இருப்பதால் அவர் மாநில அரசுப் பணிக்கு வருவதில் சற்று காலதாமதம்ஆகலாம். எனவே அதுவரை தமிழ்ச்செல்வன் தலைமையில் தேடுதல் வேட்டை நடந்து வரும். இன்னும் 2 வாரத்தில்இப்பணி தீவிரமடையும்.
கர்நாடக அதிரடிப்படையுடன் சேர்ந்துதான் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவோம். தனித்து ஈடுபட மாட்டோம்.வீரப்பனைப் பிடிக்கும் வரை ஓய மாட்டோம். சரண் அடைவது அல்லது வீரப்பனை உயிருடன் பிடிப்பது, இதில் எதுமுதலில் நடக்கிறதோ அதுவரை தேடுதல் வேட்டை தொடரும். பொது மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.
தற்போது அதிரடிப்படையில் 250 பேர் வரை உள்ளனர். இவர்களில் திறமைக் குறைவானவர்கள்,விருப்பமில்லாதவர்கள் நீக்கப்பட்டு புதிதாக போலீஸார் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என்றார் தேவாரம்.