3,000 போலீஸார் காட்டுக்குள் புகுந்தனர்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடுவதற்காக, 3,000 போலீஸார் கொண்ட கூட்டு அதிரடிப்படை, 16குழுக்களாகப் பிரிந்து வியாழக்கிழமை காட்டுக்குள் புகுந்தது.
தமிழக அதிரடிப்படையில் 600 வீரர்களும், கர்நாடக அதிரடிப்படையில் 1,500 வீரர்களும் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் தவிர, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் வீரப்பன் வேட்டைக்காக அதிரடிப்படையுடன் கூட்டுச்சேர்ந்துள்ளனர்.
15 நாட்களுக்குத் தேவையான குடிநீர், உணவு வகைகளையும் அதிரடிப்படையினர் காட்டுக்குள் எடுத்துச்சென்றுள்ளனர்.
தலைமலை, அந்தியூர், கடம்பூர், தாளவாடி உள்பட 16 இடங்களில் அதிரடிப்படையினர் வீரப்பன் வேட்டையைத்துவக்கியுள்ளனர்.
அதிரடிப்படை ஐ.ஜி. விஜயகுமார் தலைமையில், கமாண்டோ பயிற்சி பெற்ற 60 வீரர்கள் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் புகுந்துள்ளனர். மேலும், டிஐஜி தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிரடிப்படையினர் மேட்டூர் பகுதிவழியாகக் காட்டுக்குள் சென்றுள்ளனர்.
வயர்லெஸ், கண்ணிவெடி, நவீன பைனாகுலர் போன்ற கருவிகளுடனும் அதிரடிப்படையினர் காட்டுக்குள் புகுந்துவீரப்பன் வேட்டையை ஆரம்பித்து விட்டனர் என்று கூறப்படுகிறது. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.