இலங்கை: நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல்
கொழும்பு:
இலங்கையில் அதிபர் சந்திரிகா அரசுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது.
இருப்பினும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று சந்திரிகாவின் மக்கள்கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் துணை தலைவர் காரு ஜெயசூர்யா, தமிழர் கட்சிகளைச் சேர்ந்த 3 மூத்த தலைவர்கள் ஆகியோர்நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பல கட்சிகளைச் சேர்ந்த 98 எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி,தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈழத் தமிழர் விடுதலை அமைப்பு (டெலோ) மற்றும் சிலோன் தமிழர் காங்கிரஸ் ஆகியகட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டன.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு எப்போது நடக்கும் என்பதை சபாநாயகர் அனுரா பண்டாரநாயகேதெரிவிப்பார். வாக்கெடுப்புக்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சந்திரிகா அரசு வெற்றிபெற்றதா இல்லையா என்பது தெரிய வரும்.
மக்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஹக்கீம் பதவி நீக்கம்செய்யப்பட்டதையடுத்து, மக்கள் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை அக்கட்சி வாபஸ் பெற்றது.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் சந்திரிகா அரசுக்கு எம்.பி.க்களின் எண்ணிக்கை 105 ஆகக் குறைந்தது.
இந்நிலையில் ஹக்கீம் கட்சியில் இடம்பெற்றிருந்த பெரியல் அஷ்ரப் தலைமையிலான 4 எம்.பி.க்கள் சந்திரிகா அரசுக்கு ஆதரவுதெரிவித்தனர்.
இருப்பினும் நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிப்பதற்கு சந்திரிகா அரசுக்கு இன்னும் 4 எம்.பிக்கள் தேவைப்படுகின்றனர்.நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க சந்திரிகா அரசுக்கு 113 எம்.பிக்களின் ஆரவு தேவை.
இருப்பினும் தங்களுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும் தாங்கள்தோல்வியடைய மாட்டோம் என்று சந்திரிகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெரியல் அஷ்ரபின் தலைமையில் உள்ள 4 எம்.பி.க்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்றார்.
இதற்கிடையே, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை இரவு கூடி விவாதித்தது. அந்தக் கூட்டத்தில் தங்கள் கட்சிஎம்.பிக்கள், சந்திரிகா அரசுக்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளது குறித்து சம்பந்தப்பட்ட 4 எம்.பிக்கள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யு.என்.ஐ.